டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தேசிய மீனவர் பேரவை சார்பில் வெள்ளிக்கிழமை நாகை மாவட்ட மீனவக் கிராமங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மீன்பிடி படகுகளுக்கான மானிய டீசலின் அளவை உயர்த்தி வழங்க வேண்டும், படகுகளுக்கு வழங்கப்படும் மானிய டீசலுக்கு மத்திய, மாநில அரசுகள் வரி விலக்கு அளிக்க வேண்டும், தேசிய மீன்வளக் கொள்கை 2020-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான மீனவர்கள், மீனவப் பெண்கள் கருப்புக் கொடிகளுடன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டம், செருதூர், அக்கரைப்பேட்டை துறைமுகம், நம்பியார் நகர்வெள்ளப்பள்ளம், விழுந்தமாவடி, வானவன்மாதேவி, புஷ்பவனம், பூம்புகார், சந்திரப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.