காஞ்சிபுரத்தில் புதியதாக தொடங்கப்பட்ட காய்கறிச்சந்தைக்கு போதுமான வழிகள் இல்லாமல் அவதிப்படுவதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் பழைய ரயில்நிலைய சாலையில் ராஜாஜி காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டி அச்சந்தையானது காஞ்சிபுரத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள வையாவூருக்கு மாற்றப்பட்டது.
தொடர்ந்து 4 மாதங்களாக வையாவூரில் நடந்து வந்த காய்கறி சந்தை தொடர்மழை காரணமாக மழை நீர் தேங்கி சேறும்,சகதியுமாகி பொதுமக்களுக்கும், காய்கறி வியாபாரிகளுக்கும் இடையூறாக இருந்தது.இதனைத் தொடர்ந்து வையாவூரிலிருந்து காய்கறிச்சந்தையானது காஞ்சிபுரத்திலிருந்து 7 கி.மீ.தூரத்தில் உள்ள நசரத்பேட்டைக்கு வெள்ளிக்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்பட்டது.
தற்காலிகமாக தொடங்கப்பட்ட காய்கறிச் சந்தையை காஞ்சிபுரம் சார் ஆட்சியர் எஸ்.சரவணன், வட்டாட்சியர் பவானி,நகராட்சி ஆணையாளர் ரா.மகேசுவரி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.மோகன் கூறுகையில்,” வியாபாரிகள் அனைவருக்கும் போதுமான இடம் ஒதுக்கப்படவில்லை.புதிய இடத்தில் இரு வழிகள் இருந்தாலும் ஒரு வழி மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.பொதுமக்கள் வரக்கூடிய பகுதியில் வழிகளை திறந்து விட வேண்டும்.” என்றார்.
இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில் புதிய காய்கறிச்சந்தையில் குடிநீர்,கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.மொத்தம் 148 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே ஒரு வழி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.