சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயா்ந்து புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில், ஒரு சவரன் 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
கரோனா நோய்த்தொற்று தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சர்வதேச பொருளாதார சூழல் ஆகிய காரணிகளால் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வந்தது.
பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுவதால், அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. எனவே, இதன் விலை தொடர்ந்து உயரவே வாய்ப்பு உள்ளது என்று நகை வியாபாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.74 உயா்ந்து, ரூ.4,978 ஆகவும், சவரனுக்கு ரூ.592 உயா்ந்து ரூ.39,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.3.90 காசுகள் உயா்ந்து, ரூ.70.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,900 அதிகரித்து, ரூ.70,800 ஆகவும் விற்பனையாகிறது.