சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வளையசெட்டிப்பாளையத்தில் ஒருங்கிணைந்த விவசாயிகள் கூட்டமைப்பின் சங்ககிரி வட்டக்கிளையின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்சாரத்தைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும். மத்தியரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார சட்டத்தை திரும்ப பெற வேண்டும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், கைத்தறி தொழிலுக்கு வழங்கப்படும் மானியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும், வீடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை தொடர்ந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஒருங்கிணைந்த விவசாயிகள் கூட்டமைப்பின் சங்ககிரி வட்டக்கிளையின் செயலர் ஆர்.ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். நிர்வாகி எஸ்.சரவணன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் நல்லதம்பி, மணி உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர்.