வாழப்பாடி அருகே 7 அடி நீள ராட்சத மலைப்பாம்பை வனத்துறையினர் கிணற்றுக்குள் இறங்கி, 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி வனச்சரகத்தில் குறிச்சி வனப்பிரிவில், ரெங்கனூர் கிராமத்தில், 50 அடி ஆழமுள்ள உள்ள தனியார் விவசாய கிணற்றில் மலைப்பாம்பு ஒன்று விழுந்து கிடப்பதாக, வாழப்பாடி வனத்துறையினருக்கு இப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
வாழப்பாடி வனச்சரகத்தில் பாம்பு பிடிக்கும் தோட்டக்காவலர் முத்தையனுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குறிச்சி பிரிவு வனத்துறையினர், கிராம மக்களுடன் ஒன்றிணைந்து கிணற்றில் இறங்கி இரண்டு மணிநேரம் போராடி, கிணற்றில் பொந்திற்குள் புகுந்திருந்த 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் மீட்டு புங்கமடுவு வனப்பகுதியில் விட்டனர்.
கிணற்றில் பொந்துக்குள் புகுந்து இருந்த, 7 அடி நீளம் கொண்ட ராட்சத மலைப்பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து, வனப்பகுதியில் விட்ட வாழப்பாடி வனத்துறையினருக்கு, ரங்கனூர் கிராம மக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.