தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க முன்களத்தில் நின்று பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உரையாற்றி வருகிறார்.
தமிழகத்தில் பொது முடக்கத்தை நீட்டிப்பதா? இல்லையா? பொதுப் போக்குவரத்துக்கு அனுமதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
கரோனா பாதிப்பு, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.
செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் பழனிசாமி கூறியதாவது, அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக கரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா சூழலில் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான பொருள்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் விலையில்லா முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளன. ஒருவருக்கு தலா 2 முகக்கவசங்கள் விகிதம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ரேசன் கடைகளில் முகக்கவசம் வழங்கப்படும்.
நாட்டிலேயே குணமடைவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தற்போது 57 ஆயிரம் பேர் மட்டுமே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. காய்ச்சல் முகாம்களால் கரோனா தொற்றுப் பரவல் தடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 70 நடமாடும் வாகனங்கள் மூலம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 1,196 நடமாடும் வாகனங்கள் மூலம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தளர்வுகள் அறிவிப்பது, பொதுப் போக்குவரத்தை அனுமதிப்பது குறித்தும் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.