தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீடு சட்டம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்: உயர் நீதிமன்றம்

தமிழக அரசு கொண்டு வந்த தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீடு சட்டம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீடு சட்டம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்: உயர் நீதிமன்றம்
தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீடு சட்டம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்: உயர் நீதிமன்றம்

சென்னை: தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொழிலாளர் காப்பீட்டுத் திட்ட சட்டம் பொருந்தும் என தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், அறிவிப்பாணையை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் மற்றும் கல்வி நிறுவனங்களின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு தொழிலாளர் காப்பீட்டுத் திட்டம் பொருந்தும் என தமிழக அரசு கடந்த 2010-ஆம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து கல்வி நிறுவனங்கள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ஏற்கனவே இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் இருப்பதால், தற்போது தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது. இதுதொடர்பான மற்றொரு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற இருநீதிபதிகள் கொண்ட அமர்வு, கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசு உத்தரவை அமல்படுத்த உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் இருவேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதால், தொழிலாளர் காப்பீட்டுத் திட்டம் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்துமா, பொருந்தாதா என்பது குறித்து முடிவு செய்ய சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக 3 பெண் நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவிட்டார். இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, அனிதா சுமந்த், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய முழு நீதிபதிகள் அமர்வு  இந்த வழக்கை விசாரித்தது. 

இந்த வழக்கில் அகில இந்திய கல்வி நிறுவனங்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.எம்.விஜயன், கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலையா ? இல்லையா? என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது. எனவே தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியாது என வாதிட்டிருந்தார். தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் ஆஜராகி வாதிட்டிருந்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்து.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, அனிதா சுமந்த், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீட்டுத் திட்ட சட்டம் பொருந்தும் என்ற தமிழக அரசின் 2010 ஆம் ஆண்டு அறிவிப்பாணை செல்லும்.

தமிழக அரசின் அறிவிப்பாணையை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் மற்றும் கல்வி நிறுவனங்களின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com