உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இணையதளம் வழியாக கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தமபாளையத்தில் மையமாக வைத்து கோம்பை பண்ணைப்புரம் தேவாரம் அனுமந்தன்பட்டி புதுப்பட்டி ராயப்பன்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு துறையின் மூலமாக பிராட்பேண்ட் சேவை மற்றும் செல்போன் சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறது.
இந்நிலையில், உத்தமபாளையம் தொலைத்தொடர்பு மையத்தில் இணையதள சேவை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வு பெற்ற மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்காக தற்போது இணையதளம் வழியாக விண்ணப்பங்களை செய்து வருகின்றனர். இணையதள சேவை உத்தமபாளையம் பகுதியில் முடங்கி இருப்பதால் தனியார் இ-சேவை மையங்கள் மூலமாக கல்லூரிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பம் செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தொலைத்தொடர்பு பணியாளர்களிடம் கேட்டபோது, கரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் பெரும்பான்மையான பொதுமக்கள் இணையதள சேவையை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் இந்த பாதிப்பு உத்தமபாளையம் உள்பட தமிழகம் முழுவதும் இருப்பதாக தெரிவித்தனர்.