சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர்களை மாற்றி முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம், 'அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று சென்ட்ரல் மெட்ரோ நிலையம், 'புரட்சித்தலைவர் எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ' எனவும், புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ, 'புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் - கட்டம் I-ன் கீழ், ஆலந்தூர் மெட்ரோ, சென்ட்ரல் மெட்ரோ மற்றும் புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ நிலையங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகவும், பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன. மேற்கண்ட மெட்ரோ நிலையங்களின் பெயர்களை நமது மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மற்றும் புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா ஆகியோரை சிறப்பிக்கும் வகையில் மாற்றி அமைக்கலாம் என்ற உயர்மட்டக் குழுவின் பரிந்துரையை ஏற்று,
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பன்னாட்டு முனையம் என்று பெயரிட்டதைப் போல், ஆலந்தூர் மெட்ரோ என்பது “அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ” என்றும்
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய இரயில் நிலையம்’ என்று பெயர் வைத்ததைப் போல சென்ட்ரல் மெட்ரோ என்பது “புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ” என்றும்
புரட்சித் தலைவி ஜெயலலிதா, ஆசியாவில் மிகப்பெரிய பேருந்து முனையமான சென்னை புறநகர் பேருந்து நிலையத்தையும், அங்கு அமைந்துள்ள மெட்ரோ நிலையத்தையும் திறந்து வைத்ததாலும், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை நினைவு கூறும் வகையில், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ என்பது, “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ என்றும் பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.