விசைத்தறியாளர்கள் மீதான கடன் வசூலிப்பு நடவடிக்கைகளை வங்கிகள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பூர் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அச்சங்கத்தின் திருப்பூர் மாவட்டத்தலைவர் எம்.ஈஸ்வரன், மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் வெள்ளிக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது, ”விசைத்தறியாளர்களுக்கு 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தக்கூலி கிடைக்காததால் வங்கிகளில் பெற்ற கடன்களைக் கட்ட இயலவில்லை. ஆகவே, விசைத்தறியாளர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து,தமிழக முதல்வர் விசைத்தறியாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என்று 2019 ஆம் ஆண்டு மே மாதம் அறிவித்திருந்தார். இதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், சில வங்கிகள் கரோனா காலத்திலும் கூட விசைத்தறியாளர்களிடம் கடன் வசூல் மற்றும் சொத்துக்களை ஏலம் விடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
ஆகவே, தமிழக அரசு விசைத்தறியாளர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் வரையில் வங்கிகள் வசூல் மற்றும் ஏல நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.