ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் வீட்டுக்காவல் மேலும் நீட்டிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370யை மத்திய அரசு நீக்கியதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் பல முக்கியத் தலைவர்கள் பொதுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, அவரது தந்தை பரூக் அப்துல்லா ஆகியோர் கடந்த வருடம் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டு கடந்த மார்ச் மாத இறுதியில் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல் கடந்த வருடம் ஆகஸ்ட் 5 தேதி முதல் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுக்காவலில் உள்ளார் முகபூபா முப்தி. தற்போதைய கட்டத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆகஸ்ட் 5 ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. இந்நிலையில் மெகபூபாவின் வீட்டுக்காவலை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் மெகபூபா முப்தியின் வீட்டுக்காவல் மேலும் நீட்டிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், காஷ்மீரில், மெகபூபா முப்தி மற்றும் பிற அரசியல் தலைவர்களைத் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கு எனது உறுதியான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகத்தின் குரல்கள் ஒடுக்கப்பட்டும், அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டும் ஓராண்டாகிறது. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக பொதுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை தி.மு.க. எதிர்க்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.