கொடைக்கானலில் வீசிய பலத்த காற்றால் சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிக மேகமூட்டமும், பலத்த காற்றும் வீசியது.
இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பரையூர் பிரிவு வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைச் சாலையில் யூக்காலிப்டஸ் மரம் விழுந்தது.
இதனால் அப்பகுதியில் சுமார் 40 நிமிடங்களாக போக்குவரத்து பாதிப்படைந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் அப்பகுதிகளில் கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் உதவியுடன் மரம் அகற்றப்பட்டது, அதன் பின் போக்குவரத்து சீரானது.
கொடைக்கானல்−வத்தலக்குண்டு−பழனி மலைச் சாலைகளில் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஏராளமான மரங்கள் இருந்து வருகிறது. இவற்றை அகற்றுவதற்கு மாவட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.