காரைக்குடி களவாய் பொட்டல் பகுதியில் விபரங்கள் சேகரிக்க வந்த அதிகாரிகளை தடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காரைக்குடி காளவாய் பொட்டல் பகுதி உதயம் நகர் திருவள்ளுவர் தெருவில் 38 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகக் கூறி குடிசை மாற்றுவாரியம் மற்றும் நகராட்சியினர் அந்த வீடுகளுக்கு கதவு இலக்கம் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை குடிசை மாற்று வாரியத்திலிருந்து சமூகப் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் அதிகாரிகள் வந்து ஆதார் அட்டை கேட்டு ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முயன்றனர். இதற்கு அங்கு வசிக்கும் மக்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தனர்.
அதிகாரிகளிடம் பேசிய பொதுமக்கள், “ நாங்கள் 40 ஆண்டுகளாக இப்பகுதியில் வசிக்கிறோம். எங்கள் இடத்திற்கு பட்டா உள்ளது.” என்றுக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் குடியிருப்பவர்களின் பட்டா நகலை பெற்றுக் கொண்டு திரும்பிச் சென்று விட்டதால் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.