பொதுமுடக்கம் காரணமாக கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டிருந்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
பொதுமுடக்கம் காரணமாக கடந்த 2 மாதங்களாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் காணொலி மூலம் முக்கிய வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் திங்கள்கிழமை முதல் காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை நேரடியாக வழக்குகள் விசாரிக்கப்படும். மேலும் வழக்கின் இருதரப்பினர் விருப்பம் தெரிவித்தால் பகல் 2.30 மணி முதல் 4.45 மணி வரை காணொலி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வளாகம் முழுவதும் தீயணைப்பு வீரர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதையடுத்து வளாகத்தின் பிரதான நுழைவுவாயில் மட்டும் திறக்கப்பட்டு, வலது மற்றும் இடதுபுறமுள்ள நுழைவுவாயில்கள் மூடப்பட்டன. விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் மனுக்கள் பட்டியலில் உள்ள வழக்குரைஞர்கள் மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் ஒருங்கிணைந்த வளாகத்தின் பிரதான நுழைவு வாயிலில் வைத்து சமூக இடைவெளியைப் பின்பற்றி வரிசையாக அனுப்பப்பட்டனர். அனைவரும் முகக் கவசங்கள் அணிந்துள்ளரனா என உறுதிசெய்த பிறகே நீதிமன்ற அறைகளில் நுழைய அனுமதிக்கப்பட்டனர். நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் அமரும் பிரிவில் 10 இருக்கைகள் மட்டுமே இடைவெளி விட்டுப் போடப்பட்டிருந்தன. இதையடுத்து 14 நீதிபதிகளும் வழக்கமான விசாரணையை மேற்கொண்டனர்.