10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் சங்கம் வழக்கு தொடுத்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வருகிற ஜூன் 15 ஆம் தேதி முதல் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தேர்வுகள் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
'தற்போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தேர்வுகளை நடத்துவது மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் வெளியூர் மாணவர்கள் பலர் தங்கள் புத்தகங்களை விடுதிகளில் விட்டுச் சென்றுள்ளனர். அவர்களுக்கு தேர்வுக்கு முன்னதாக போதிய பயிற்சி வழங்கப்பட வேண்டியுள்ளது. எனவே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்' என நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில் ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.