கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தென்மேற்குப் பருவ மழை கேரளத்தில் தீவிரமடைந்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய இலோசனது முதல் மிதமான மழையும், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில்..
பேச்சிப்பாறையில் 9 செ.மீ. மழையும், கரூர் பரமத்தியில் 8 செ.மீ. மழையும், குழித்துறை, துவக்குடியில் தலா 6 செ.மீ. மழையும், திருக்காட்டுப்பள்ளி, கன்னிமார் பகுதியில் தலா 5 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாகவும், அதனை தொடர்ந்து 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் வலுவடைந்து நாளை பிற்பகல் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மகாராஷ்டிரம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு குஜராத் கடற்கரையில் ஹரிஹரேஸ்வர் மற்றும் தாமனுக்கு இடையே அலிபாக் அருகே கரையைக் கடக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.