சூலூர்: கோவை மாவட்டம், சூலூர் அருகே எலச்சிபாளையத்தில் திருமண செலவுக்காக வைத்திருந்த பணத்தில் 450 ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருள்களை மணமக்கள் வழங்கினர்.
சூலூர் அருகே எலச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஈரோடு மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த செல்விக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்நிலையில், கரோனா தொற்றால் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, தள்ளிவைக்கப்பட்ட திருமணம் மிகவும் எளிய முறையில் எலச்சிபாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மணமக்கள் தங்களது திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த பணத்தில் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வாங்கி திருமணம் முடித்த கையோடு அப்பகுதியைச் சேர்ந்த 450 ஏழை மக்களுக்கு வழங்கினர்.