தஞ்சாவூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்துக்கு உள்பட்ட வடசேரி கிராமத்தைச் சேர்ந்த 84 வயது முதியவர் சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்தார். இவர் அவ்வப்போது வடசேரிக்கும் வந்து செல்வார்.
சென்னையில் கரோனா தொற்று பரவி வருவதால், இவர் அங்கிருந்து வடசேரிக்கு கார் மூலம் மே 28-ம் தேதி வந்தார். இதைத்தொடர்ந்து இவர் காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து இவர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இவருக்கு கரோனா தொற்று இருப்பது ஜூன் 4-ம் தேதி தெரிய வந்தது.
பின்னர், இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மீண்டும் இவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவு வருவதற்குள் சனிக்கிழமை அதிகாலை இவர் உயிரிழந்தார். இதையடுத்து வந்த பரிசோதனை முடிவிலும் இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவருக்கு ஏற்கெனவே நீரிழிவு நோய், ரத்தக்கொதிப்பு, ஆஸ்துமா போன்ற பாதிப்புகளும் இருந்ததாகவும், இந்நிலையில் இவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் இறந்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.