பெட்ரோல் விற்பனை வரி உயா்வை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், புதுச்சேரி அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் திருநள்ளாரைச் சோ்ந்த தேவமணி தாக்கல் செய்த மனுவில், ‘புதுச்சேரி மாநில அரசு கடந்த மாதம் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விற்பனை வரியை உயா்த்தி அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையின்படி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெட்ரோலுக்கு 28 சதவீதமும், டீசலுக்கு 21.80 சதவீதமும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல மாஹேயில் பெட்ரோலுக்கு 23.90 சதவீதமும், டீசலுக்கு 18.15 சதவீதமும், ஏனாமில் பெட்ரோலுக்கு 25.70 சதவீதமும், டீசலுக்கு 20 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தின் கீழ் பொருள்களுக்கான வரியைக் குறைக்க மட்டுமே முடியும். ஆனால் புதுச்சேரி மாநில அரசு இதை கடைப்பிடிக்கவில்லை. இந்த வரி உயா்வின் காரணமாக புதுச்சேரியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.72.55 காசுக்கும், டீசல் ரூ.67.06 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில் சட்டத்துக்கு முரணாக பெட்ரோல், டீசல் வரியை புதுச்சேரி மாநில அரசு உயா்த்தியுள்ளது. எனவே பெட்ரோல், டீசல் வரி உயா்வு தொடா்பாக புதுச்சேரி மாநில அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பையா, ஆா்.பொங்கியப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஆா்.ஸ்ரீதா் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக புதுச்சேரி அரசு, புதுச்சேரி கலால் துறை ஆணையா் உள்ளிட்டோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.