தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்,
சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும்,
தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். லட்சத்தீவு, மாலத்தீவு, கேரள கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.
எனவே, அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதேபோன்று மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். இதனால் ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் மீனவர்கள் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.