கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மீண்டும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ரேலா இன்ஸ்டிட்யூட் அண்ட் மெடிக்கல் செண்டா் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஜெ. அன்பழகன் உடல்நிலை குறித்து ரேலா மருத்துவமனை இன்று (திங்கள்கிழமை) மருத்துவ அறிக்கை வெளியிட்டது.
அதன்படி, திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கடந்த 2-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, 3-ஆம் தேதி அவருக்கு வென்டிலேட்டர் உதவி வழங்கப்பட்டது. தொடக்கத்தில் அவருக்கு 90 சதவீத ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. பிறகு அடுத்த 2 நாள்களில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் கண்டதையடுத்து, அவருக்கு வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் 40 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து, அவர் படிப்படியாக வென்டிலேட்டரிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டார்.
எனினும், இன்று மாலை முதல் அவரது உடல்நிலை மீண்டும் மோசமடையத் தொடங்கியது. அவருக்கு வழங்கப்படும் ஆக்ஸிஜன் தேவை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அவரது இருதய செயல்பாடும் மோசமடைந்துள்ளது. ரத்த அழுத்தத்துக்காக மருத்துவ உதவிகள் தேவைப்படுகின்றன. மேலும், நாள்பட்ட சிறுநீரக நோயும் மோசமடைந்து வருகிறது.
தற்போதைய நிலையில், அவர் கவலைக்கிடமாக உள்ளார்.