காஞ்சிபுரம் அருகே கர்ப்பிணி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே கிழம்பி புதூர் பகுதி கங்கை அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஹரி(25). இவரது மனைவி தேவி(21) இருவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
4 மாத கர்ப்பிணியாக இருந்து வரும் இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக கணவர் கடப்பாரையால் தேவியின் தலையில் ஓங்கி அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கணவர் ஹரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.