சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகளை நடத்த இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஆன்லைன் வகுப்பின் போது ஆபாச விளம்பரங்கள் வருவதாகக் கூறி, இரண்டு பிள்ளைகளின் தாய் சரண்யா என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
தமிழகத்தில் மாநில அரசு சார்பில் பிரத்யேக கல்வி சேனல் நடத்தப்படுகிறது என்று தமிழக அரசு வழக்குரைஞர் வாதத்தை முன் வைத்தார்.
பாதுகாப்பான ஆன்லைன் கல்வியை வழங்க என்னென்ன வழிமுறைகள் உள்ளது என்பது குறித்து ஜூன் 20-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், கரோனா தொற்றால் அனைத்துமே ஆன்லைன் முறையில் உள்ளதால், பள்ளிகளில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.