பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கரோனா நிவாரணம் வழங்க வலியுறுத்தி திருவாரூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டுக்குழுவின் சார்பில் மாவட்டச் செயலாளர் துரை அருள்ராஜன், மாவட்ட தலைவர் சு.பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் மனுகொடுக்கப்பட்டது. கரோனா ஊரடங்கால் சிறு மற்றும் குறுந்தொழில்கள் முடங்கிப்போயுள்ளன. இதனால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாட்களைப் பெருமளவு வேலையிலிருந்து வெளியேற்றி வருகின்றன. இதனால் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் பெருமளவு அதிகரித்து சமூகப்பிரச்னைகளுக்கு வித்திடும்.
ஆகவே தமிழகத்தின் நலன் கருதி சிறு மற்றும் குறுந்தொழில்களைப் பாதுகாக்க வேண்டுமெனவும் மேலும் சிறு குறுந்தொழில்களுக்கு மானியத்துடன் கடன் வழங்க வேண்டுமெனவும் பணியாட்களை வேலை நீக்கம் செய்யும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்க சென்றனர். மாவட்ட ஆட்சியர் இல்லாததால் மாவட்ட வருவாய் அலுவலர் பி.பொன்னம்மாளிடம் மனு வழங்கப்பட்டது.