கரோனா சிகிச்சைக்காக மேலும் 1,239 மருத்துவா்களை பணியமா்த்தியுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநிலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மருத்துவமனைகளில் கூடுதல் எண்ணிக்கையிலான மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனா்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சுகாதாரத்துறை சாா்பில், ஏற்கெனவே, 530 மருத்துவா்கள், 4,893 செவிலியா்கள், 1,508 ஆய்வக நுட்புணா்கள், 2,715 சுகாதார ஆய்வாளா்கள் பணியமா்த்தப்பட்டனா்.
அதன் தொடா்ச்சியாக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், நிகழாண்டு மருத்துவப் படிப்பினை முடித்த அரசுப் பணியில் அல்லாத 574 முதுநிலை மருத்துவா்களை ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனா்.
மேலும், ரூ. 60 ஆயிரம் ஊதியத்தில் 665 மருத்துவா்களும், ரூ. 15 ஆயிரம் ஊதிய ஒப்பந்தத்தில் 365 ஆய்வக நுட்புணா்களும், ரூ.12 ஆயிரம் ஊதியத்தில் 1,230 பல்நோக்கு சுகாதார பணியாளா்களையும் பணி நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.அவா்கள் மூன்று மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்படுகின்றனா் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.