தமிழகத்தில் கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை புதிய வகை கிருமிநாசினி தெளிப்பு இயந்திரத்தின் இயக்கத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், புதிய இயந்திரத்தின் இயக்கத்தை தொடங்கி வைத்த அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் தற்போது கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க வழங்கப்பட்டுள்ளது. இக்கல்லூரிகள் அனைத்தும் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் கல்லூரித் தேர்வுகள் நடத்த இயலாது. கரோனா தொற்று பாதிப்பு குறைந்த பின்னரே தேர்வுகள் குறித்து முடிவெடுக்க இயலும். ஆகவே இதுவரை கல்லூரி தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கவில்லை.
இதேபோல கல்லூரித் தேர்வு முடிவுகள் என்பது மாணவர்களின் எதிர்காலத்துக்கு மிக முக்கியமாகும். எனவே, தேர்வுகள் ரத்து செய்வது தொடர்பாகவும் எவ்வித முடிவும் எடுக்கவில்லை.
இருப்பினும், இது தொடர்பாக தமிழக முதல்வரின் கவனுத்துக்கு கொண்டு சென்று ஆலோசித்து அதன்பிறகு முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.