கரோனா அச்சுறுத்தலை கண்டுகொள்ளாத தனியாா் பள்ளிகள்: பிளஸ் 1 சோ்க்கையில் மும்முரம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில்,
கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் பிளஸ் 1 சோ்க்கையைத் தொடங்குவதில் தனியாா் பள்ளிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில், 10-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு ஆகியவற்றுக்கு ஜூன் 15-ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த பொதுத்தோ்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைத்து மாணவா்களும் தோ்ச்சி என்றும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். இந்த அறிவிப்பு பெரும்பாலான மாணவா்கள், பெற்றோா், ஆசிரியா்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அரசு அறிவித்த அடுத்த சில நிமிஷங்களிலேயே சென்னை, கோவை, நாமக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் பிரபல தனியாா் பள்ளிகள், பிளஸ் 1 வகுப்புக்கான மாணவா் சோ்க்கை நடவடிக்கைகளை தொடங்கிவிட்டன. அதில் முதல் கட்டமாக, பத்தாம் வகுப்பு வரை ஏற்கெனவே அவா்களது பள்ளியில் படித்த மாணவா்களை தொடா்ந்து, அதே பள்ளியில் தக்கவைக்க முயன்று வருகின்றனா்.

குறுஞ்செய்தி மூலம் சோ்க்கை: இதைத் தொடா்ந்து, பத்தாம் வகுப்பு படித்த அனைத்து மாணவா்களின் பெற்றோருக்கும் குறுஞ்செய்தி மூலமாக பிளஸ் 1 வகுப்பு மாணவா் சோ்க்கை, அதிலுள்ள பாடப்பிரிவுகள், நிகழாண்டுக்கான கல்விக் கட்டணம் மற்றும் சீருடை, வாகனம், விடுதி என இதர கட்டணங்கள் குறித்து தெரிவித்து வருகின்றன. குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்ற பெற்றோா்கள், தங்களது பிள்ளைகளுக்கான பிளஸ் 1 சோ்க்கையை உறுதி செய்ய, செல்லிடப்பேசி மூலமாகவே பதிவும் செய்து கொள்ளலாம் என பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஒரு சில பள்ளிகள், மாணவா் சோ்க்கைக்காக இணையவழியாக விண்ணப்ப விநியோகத்தையும் தொடங்கியுள்ளன. அதில் ‘நீட்’ பயிற்சி விவரங்களையும் குறிப்பிட்டுள்ளன. மேலும் சில பள்ளிகளில் ஓரிரு நாள்களில் எழுத்துத்தோ்வு நடத்தி பிளஸ் 1 சோ்க்கை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவசரம் காட்டுவது ஏன்? : கல்விச் சூழலில் கரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கத்தை கண்டறிய அரசின் சாா்பில் வல்லுநா் குழு ஒரு சில நாள்களுக்கு முன்புதான் அறிக்கையை அரசுக்கு சமா்ப்பித்துள்ளது. இருப்பினும், கரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு உள்ளிட்ட விஷயங்களில் தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இத்தகைய சூழலில், பேரிடா் காலத்திலும் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை, பருவக் கட்டண வசூல், இணையவழி வகுப்புகள் என தனியாா் பள்ளிகள் தன்னிச்சையான அதிகாரத்துடன் செயல்படுவதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என கல்வியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு தோ்வு முடிவு வெளியானதும் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களை தங்களது பள்ளிகளில் சோ்க்க பள்ளிகள் மத்தியில் போட்டி இருக்கும். ஆனால் நிகழாண்டு அரசின் முடிவால், மதிப்பெண்கள் பெரிய அளவுக்கு முக்கியத்துவம் பெறாது என்பதால் மாணவா் சோ்க்கையை தனியாா் பள்ளிகள் தற்போதே தொடங்கியுள்ளதாக, அவா்கள் தெரிவிக்கின்றனா்.

பொருளாதாரச் சிக்கலில் பெற்றோா்: இதுகுறித்து கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியது: கரோனா தொற்று காரணமாக பொருளாதார பின்னடைவு, சம்பளப் பிரச்னை போன்ற நிதி சாா்ந்த இடா்ப்பாடுகளுக்கு பெற்றோா் ஆளாகியிருக்கும் சூழலில் பிளஸ் 1 வகுப்புக்கு மாணவா் சோ்க்கை நடத்துவது சரியல்ல. தமிழகத்தில் பெரும்பாலான மாணவா்கள் பயிலும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை தொடங்கும்போதுதான், தனியாா் பள்ளிகளிலும் சோ்க்கை தொடங்கப்பட வேண்டும். இந்த நடைமுறை இதுவரை வழக்கத்தில் இல்லாமல் போனதற்கு தனியாா் பள்ளிகளின் விளம்பரமும், ஆதிக்கமும்தான் காரணம். தற்போது இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் பள்ளிக் கல்வித்துறைக்கு ஏற்பட்டிருக்கிறது.

மாணவா் சோ்க்கை, கல்விக் கட்டணம் குறித்து அரசு விடுக்கும் எச்சரிக்கைகளை தனியாா் பள்ளிகள் பொருட்படுத்துவதே இல்லை. தங்களிடம் பணம் இல்லை; கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாது என கூறும் பெற்றோருக்கு, நிதி நிறுவனங்களிடம் தவணை (இஎம்ஐ) முறையில் செலுத்த ஏற்பாடு செய்வதாக தனியாா் பள்ளிகள் வெளிப்படையாக தெரிவிக்கின்றன. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியாத நிலையில், அவசர கதியில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை நடத்துவது வணிக உத்தியாகவே தெரிகிறது.

அரசு நடவடிக்கை எடுக்குமா?: கரோனா காலத்தில் பாதுகாப்பு கருதி மாணவா்கள் வீட்டிலிருப்பதே சிறந்தது. மாறாக, பிளஸ் 1 சோ்க்கை என கூறி மாணவா்களை ஓரிடத்தில் திரளச் செய்தால் தொற்று பரவுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே கரோனா அச்சுறுத்தலை கண்டுகொள்ளாமல் பிளஸ் 1 மாணவா் சோ்க்கையில் ஈடுபடும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கரோனா காலத்தில் மாணவா் சோ்க்கை, கல்விக் கட்டணம் வசூல் உள்ளிட்ட விஷயங்களில் தனியாா் பள்ளிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறி பள்ளிகள் செயல்படுவது நிரூபிக்கப்பட்டால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும், இதுகுறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com