கர்நாடகா அணைகளிலிருந்து தமிழகத்திற்கு மாதாந்திர தேவைக்காகத் திறக்கப்பட்ட தண்ணீர் 3 நாட்களுக்குப் பின்னர் தமிழகம் வந்தடைந்தது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் பேரில் தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரை கடந்த 8 ஆம் தேதி கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் மூன்று நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் நுழைவிடமான பிலிகுண்டுலுவிற்கு வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 1 மணி அளவில் வந்தடைந்தது.
இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 1000 கன அடியாக தண்ணீரின் அளவானது, கர்நாடகா மற்றும் தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 1200 கனஅடியாகவும், பின்னர் கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக -கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு மதியம் ஒரு மணி நிலவரப்படி நொடிக்கு 2300 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.
மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், 3 மணி நிலவரப்படி நொடிக்கு 2700 கனஅடியாக அதிகரித்தது வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவின் போது பாறை திட்டுக்கள் வெளியே தெரிந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக அனைத்தும் மூழ்கிக் காணப்பட்டும், ஒகேனக்கல் பிரதான அருவி சினி அருவி மற்றும் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.