கரோனா பாதித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக எம்எல்ஏ கே. பழனி நலமடைய விரும்புவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ கே.பழனி அவர்கள் முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.
பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த கே.பழனி(57) உள்ளார். இவர் அதிமுகவில் குன்றத்தூர் ஒன்றிய செயலாளராகவும் இருந்து வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களில் கே.பழனி மட்டுமே வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க போடப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக நிவாரண பொருள்களை தினமும் ஒரு பகுதியில் வழங்கி வந்தார்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை கே.பழனி உடல்சோர்வால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் அன்றே கரோனா பரிசோதனை செய்ததாகவும், இதில் வெள்ளிக்கிழமை மாலை அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் உடனடியாக சென்னை மணப்பாக்கம் பகுதியில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.