தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள்: 5 முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

தமிழகத்தில் முதலீடு செய்ய 5 முன்னணி நுகர்வோர் பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள்: 5 முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: தமிழகத்தில் முதலீடு செய்ய 5 முன்னணி நுகர்வோர் பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, தமிழக முதல்வர் பழனிசாமி, வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதலீடுகளை எளிதாக ஈர்ப்பதற்காக, நாடுகளுக்கான சிறப்பு அமைவுகளை உருவாக்குதல், வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக்குழு அமைத்தல் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவல் உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்துள்ளன.

அண்மையில் 15,128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன. இது இந்த பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டை கருதுவதை எடுத்துக்காட்டுகிறது.

உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்பொழுது, கேட் ஸ்பேட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் லிஸ்ஃப்ரேஸர், பாசில் குழுமத்தின் தலைவர் கோஸ்டா கார்ட்கோடிஸ், நைக் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் ஜான் டான்ஹூ, அடிடாஸ் ஏஜி நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் காஸ்பர் ரோர்ஸ்டட், மேட்டல் இங்க் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் திருயோனன் கிரைஸ், ஆகிய 5 முன்னணி நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரிடையாக அழைப்பு விடுத்து முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகளை வழங்கிடும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com