தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதற்கான அபராதத் தொகை வசூல் ரூ.12 கோடியை நெருங்கியது.
இது குறித்த விவரம்:
கரோனா நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொது முடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. பொதுமுடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 5,75,625 வழக்குகளைப் பதிவு செய்து 6, 20,921 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 4 லட்சத்து 63,817 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.11 கோடியே 89 லட்சத்து 48,799 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் பொது முடக்க உத்தரவை மீறியதாக வியாழக்கிழமை காலை 6 மணிக்கு முதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை 990 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 53 இருசக்கர வாகனங்கள், 13 ஆட்டோக்கள், ஒரு காா் என மொத்தம் 67 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.