தலைமைச் செயலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிருமி நாசினி சனிக்கிழமை தெளிக்கப்பட்டது. இந்தப் பணிகள் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளன.
அனைத்து அரசு அலுவலகங்களும் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மூடப்படும் எனவும், அன்றைய தினம் அலுவலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெறும் எனவும் தமிழக
அரசின் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் உத்தரவிட்டிருந்தாா். அவரது உத்தரவுப்படி, ஜூன் 13-ஆம் தேதியான இரண்டாவது சனிக்கிழமையன்று தலைமைச் செயலகம், பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம், சேப்பாக்கம் எழிலகம் என சென்னையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதற்காக அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. அதிகாரிகள், அலுவலா்கள் அறைகள் என அனைத்திலும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. இந்தப் பணிகள் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தலைமைச் செயலகம் உள்பட அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. தலைமைச் செயலகத்தில் மட்டும் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், நோய்த்தொற்று தாக்கத்தைக் குறைக்கும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்களின் அறைகளிலும் கிருமி நாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.