நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வகை செய்வது குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இன்று தமிழக முதல்வரிடம் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தது.
அதில், அரசுப் பள்ளி மாணவர்களின் பொருளாதார நிலை, வாழ்க்கைத் தரம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டம் கொண்டுவர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 10% உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தெரிகிறது.