சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தீவிபத்தில் வைக்கோல் படப்புகள் எரிந்து நாசமாகின.
மானாமதுரை ஓன்றியம் ஆலம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன், சுதந்திரககண்ணன் இவர்கள் தங்களது வயலில் நெல் அறுவடை செய்தபின் வயலில் கிடைத்த வைக்கோலை வீடுகளுக்கு அருகே அடுத்தடுத்து படப்புகளாக வேய்ந்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் ஒருபக்க வைக்கோல் படப்பில் திடீரென தீப்பிடித்து மளமளவென பரவி பக்கத்திலிருந்த வைக்கோல் படப்புக்கும் பரவி எரிந்தது. கிராம மக்கள் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை.
பின்னர் மானாமதுரை தீயணைப்புத் துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஆலம்பச்சேரி கிராமத்துக்கு விரைந்து வந்து வைக்கோல் படப்புகளில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் வைக்கோல் படப்புகள் முழுவதும் எரிந்து சாம்பலானது.