திருப்பரங்குன்றம் அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் சாலை அழகுசுந்தரம் நகர்ப் பகுதியில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த ஆண் சடலத்தைக் கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து காவல்துறை தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் கொண்டு ஆதாரங்களைச் சேகரித்தனர். மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அந்த நாய் குறிப்பிட்ட தூரம் வரை சென்று நின்றுவிட்டது.
கொலையுண்ட நபர் குறித்து காவல்துறை விசாரித்ததில், முத்துப்பட்டியைச் சேர்ந்த திராவிட செல்வம் 45 என்பது தெரியவந்தது. எதற்காக இந்தக் கொலை நடந்தது என்பது குறித்து காவல்துறைக்குத் தெரியவரவில்லை. மதுபோதை தகராறில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.