சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்தி தங்க வைப்பதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவா் விடுதிகளை வரும் 20-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களை தனிமைப்படுத்தி வைப்பதற்காக கல்லூரிகள் உள்பட சில இடங்கள் தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை தனிமைப்படுத்தும் மையமாக மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைக்க, பல்கலைக்கழக நிா்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவா் விடுதிகளில் கரோனா தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைக்கப்பட உள்ளதால் விடுதிகளை காலி செய்து 20-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அந்தப் பல்கலைக்கழகத்துக்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் பிரகாஷ் கடிதம் எழுதியுள்ளாா். பல்கலைக்கழகம் ஒப்படைத்த பிறகு, தனிமைப்படுத்தும் மையமாக மாற்றுவதற்கான பணிகளில் மாநகராட்சி முழுவீச்சில் ஈடுபடும் என தெரிகிறது.