தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக 6 லட்சம் போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கரோனா தொற்றை தடுக்கும் வகையில், கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் பொது முடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. பொது முடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 6 லட்சத்து 3,186 வழக்குகளைப் பதிவு செய்து 6 லட்சத்து 51,426 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொதுமுடக்க உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 4 லட்சத்து 76,347 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.13 கோடியே 12 லட்சத்து 3,674 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் பொது முடக்க உத்தரவை மீறியதாக செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி, புதன்கிழமை காலை 6 மணி வரை 1025 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 10 இருசக்கர வாகனங்கள், 4 ஆட்டோக்கள் என மொத்தம் 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.