நம்பியூர்: ஜூலை முதல் வாரத்தில் 12-ஆம் வகுப்புப்பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கரோனா பொதுமுடக்கம் காரணமாக புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தாமதமாகியுள்ளது. பாடங்களைக் குறைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. சூழ்நிலையைப் பொறுத்து பருவத் தேர்வுகள் குறைக்கப்படும். புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து அறிவிக்கப்படும்.
பிளஸ் தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்கள் முதன்மை கல்வி அலுவலகர்கள் மூலம் கோரப்பட்டுள்ளது. இதில் தேர்வு எழுத தயாராக உள்ள மாணவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகு முடிவு எடுக்கப்படும்.
மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஜூலை முதல் வாரத்தில் 12-ஆம் வகுப்புப்பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.