சேலம் மாவட்டம் கெங்கவல்லி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் உள்பட 20 பேருக்கு கரோனா இல்லை என்று அறிக்கை வந்ததால் அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கெங்ககவல்லி காவல் நிலையத்தில் நடுவலூரைச் சேர்ந்த 24 வயதுள்ள மணல் கடத்தல் கைதிக்கு கரோனா தொற்று உறுதியானது. அதையடுத்து அவரை விசாரித்த காவல் ஆய்வாளர் உள்பட 20 காவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
காவல் நிலையம் முழுவதும், செவ்வாய்க்கிழமை மாலை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, இரவு மூடப்பட்டது. பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட காவல் ஆய்வாளர் 20 பேரும் செவ்வாய்க்கிழமை முதல் சேலத்திலுள்ள தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் அனைவருக்கும் வந்த கரோனா பரிசோதனை அறிக்கையில் யாருக்கும் தொற்று இல்லை என்று வியாழக்கிழமை வந்தது. அதையடுத்து சேலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட அனைவரையும், அவரவர் வீடுகளுக்குச் சென்று 7 நாள்கள் தனிமையில் இருந்து கொள்ளுமாறு வியாழக்கிழமை பிற்பகல் அனுப்பி வைக்கப்பட்டனர். யாருக்கும் தொற்று இல்லையென்பதால் காவலர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.