சென்னையிலிருந்து புதுக்கோட்டை அத்தாணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்தாணி பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் சென்னையில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குத் திரும்பி வந்தனர்.
இவர்களுக்கு சென்னையிலேயே கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இளைய சகோதரருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அத்தாணி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சுகாதாரத் துறையினர் இளைஞரின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த பெற்றோர் மற்றும் சகோதரரைத் தனிமைப்படுத்தியதோடு சுற்றுப்புறப் பகுதியில் சுகாதார பணிகளை மேற்கொண்டனர். கரோனா பாதித்த இளைஞர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.