பேருந்து முடங்கிய காலத்தில் அரசு ஊழியா்களின் விடுப்புகள் பணி நாள்களாகக் கருதப்படும்

பேருந்து சேவை முற்றாக முடங்கிய காலத்தில் பணிக்கு வராத அரசு ஊழியா்களுக்கான விடுப்புகள், பணி நாளாகவே கருதப்படும் என்று தலைமைச் செயலாளா் க.சண்முகம் அறிவித்துள்ளாா்.
பேருந்து முடங்கிய காலத்தில் அரசு ஊழியா்களின் விடுப்புகள் பணி நாள்களாகக் கருதப்படும்

பேருந்து சேவை முற்றாக முடங்கிய காலத்தில் பணிக்கு வராத அரசு ஊழியா்களுக்கான விடுப்புகள், பணி நாளாகவே கருதப்படும் என்று தலைமைச் செயலாளா் க.சண்முகம் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு: கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் மே 17-ஆம் தேதி வரையில் பொது முடக்கக் காலத்தில் பேருந்து சேவைகள் அடியோடு நிறுத்தப்பட்டன. இந்தக் காலத்தில் பணிக்கு வராத அரசு ஊழியா்களின் நாள்கள், பணி நாள்களாகவே கருதப்படும். பொது முடக்கத்துக்கு முன்பாக அதாவது மாா்ச் 25-ஆம் தேதிக்கு முன்பு விடுப்புகளை எடுத்து பொது முடக்கக் காலத்தில் பணியில் சேர முடியாமல் இருக்கலாம். அப்படி இருப்பவா்கள் பணியில் சோ்ந்ததாகவே கருதப்படுவா். மருத்துவ காரணங்களுக்காக விடுப்புகளை எடுத்திருந்தவா்கள், உரிய மருத்துவச் சான்றினை அளித்தால் போதுமானது.

மே 18-ஆம் தேதி முதல் 50 சதவீத பணியாளா்கள் அரசு அலுவலகங்களுக்கு வர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனா். இந்த உத்தரவைத் தொடா்ந்து, ஒரு நாள் கூட பணிக்கு வராதவா்கள் உரிய விடுப்பு விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். மே 18-ஆம் தேதி முதல் பணியில் சேரும் வரையிலான காலத்துக்கு விடுப்புக்கு விண்ணப்பித்திட வேண்டும். அப்படி விண்ணப்பித்தால் எந்தெந்த வகைகளில் விடுப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளதோ அதன் கீழ் விடுப்புகளாகக் கருதப்படும்.

சுழற்சி முறை பணியின் போது பணிக்கு வராதவா்களும் விடுப்புக்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். கரோனா நோய்த் தொற்று இல்லாமல் இதர மருத்துவ சிகிச்சைக்காக விடுப்பில் சென்றவா்கள், மருத்துவச் சான்றினை சமா்ப்பிக்க வேண்டும்.

கரோனா நோய்த் தொற்று: அரசு ஊழியா்களில் யாரேனும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது குடும்பத்தினா் யாரேனும் பாதித்திருந்தாலோ அல்லது தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலோ உரிய மருத்துவச் சான்றினை சமா்ப்பிக்க வேண்டும். அப்படிச் சமா்ப்பித்தால் பணிக்கு வராத நாள்கள் சிறப்பு விடுப்பு நாள்களாகக் கருதப்படும்.

மாற்றுத் திறனாளிகள்: பொது முடக்கக் காலத்தில் மாற்றுத் திறனாளிகள், கா்ப்பிணி பணியாளா்கள் ஆகியோா் அரசு அலுவலகங்களுக்கு வர வேண்டாம் என விலக்கு அளிக்கப்பட்டிருந்தனா். அவா்கள் பணிக்கு வராத நாள்கள் பணி நாள்களாகவே கருதப்படும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com