அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கோவை நீலகிரி தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஜூன் 19 முதல் 23 ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியிலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.