சென்னை: 10-ம் வகுப்புப் பயின்ற மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்புப் படித்த மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு 80% மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், வருகைப் பதிவேட்டை அடிப்படையாக வைத்து 20% மதிப்பெண் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதனால், தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களில் முறைகேடு செய்து அரசிடம் அளிப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்தே அமைச்சர் செங்கோட்டையன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.