கோவை சுகாதாரத் துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண்ணுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் கடந்த சில நாட்களுக்கு முன் விடுமுறை எடுத்து தேனிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் திரும்ப பணிக்கு வந்தவரை கரோனா பரிசோதனை எடுத்து வர அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை செய்துள்ளார். இதில் இவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகம் அடைக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவிர சுகாதாரத் துறை அலுவலகத்தில் பணியாற்றும் மற்ற பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.