மதுரை: கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு எந்த அடிப்படையில் கபசுரக் குடிநீர் வழங்குகிறீர்கள் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
சித்த மருத்துவப் பொடியை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரிய மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அங்கீகரிக்கப்பட்ட சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் கண்டுபிடிக்கும் மருந்துகளை ஆய்வு செய்ய என்ன நடைமுறை உள்ளது?
அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்கள் கண்டுபிடித்த மருந்தை இதுவரை ஆய்வு செய்யாதது ஏன்?
கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயத்தை, எந்த பரிசோதனையின் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
மேலும், ஆங்கில மருத்துவ லாபி இயற்கை மருத்துவத்தை அழித்து விடும் என்ற அச்சம் எழுந்துள்ளது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.