கோவில்பட்டியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் காவல்நிலையத்தில் மரணம் அடைந்த சம்பவத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்க மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், தந்தை - மகன் மரணத்துக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை முழு கடையடைப்பு நடத்தப்படும் என்றும் வணிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காவல்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால் சாத்தான்குளத்தில் தந்தை - மகன் என இரண்டு வணிகர்கள் பலியாகியுள்ளனர். இதனை கண்டித்து, உயிர் பலிக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, உடனடி தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா, தமிழக காவல்துறை டிஜிபியை இன்று நேரில் சந்தித்து மனு அளித்தார்.
மனுவில், உயிரிழந்த தந்தை - மகன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி உடனடி நிவாரணமாக வழங்கிடவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும், இதுபோன்ற கொலைகள் இனியும் நடந்திடாமல் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.