கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்குவது? உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை: அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வசூலிக்காமல் ஆசிரியர் உள்ளிட்டோருக்கு எப்படி ஊதியம் வழங்க முடியும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை சட்டவிரோதமானது. மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் மூலம் தான் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியும்.
மேலும் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாககடந்த 3 மாதங்களாக பள்ளிகள் இயங்கவில்லை. ஆனால் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் தனியார் பள்ளிகள் ஊதியம் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை வசூலிக்க தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கினால் தான் ஆசிரியர்களுக்கும்,பணியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும்.
எனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும் வழக்கு முடியும் வரை அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் காணொலி காட்சி மூலம் விசாரித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களுக்கு ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும். இந்த நிலையில், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வசூலிக்காமல் ஆசிரியர் உள்ளிட்டோருக்கு எப்படி ஊதியம் வழங்க முடியும். மேலும் பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கிவிட்டன.
தனியார் கல்வி நிறுவனங்கள் வகுப்புகளை நடத்த ஆசிரியர்களை நிர்பந்திக்கும் நிலையில் அவர்களுக்கு எப்படி ஊதியம் வழங்காமல் இருக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த மனு தொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 30- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.