ஈரோட்டில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 38 வயது பெண் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
ஈரோடு மாநகராட்சி, வளையக்கார வீதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் மனைவிக்கு அண்மையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. 20 வயதான இவர் கர்ப்பிணி எனக் கூறப்படுகிறது. பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு உதவியாக தாய் உடன் இருந்துள்ளார்.
38 வயதான இவருக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் திங்கள்கிழமை காலை தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று காலை திடீரென உயிரிழந்தார்.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.