தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து தினந்தோறும் அளவுக்கு அதிகமான அளவில் இயற்கை வளங்களை கேரளத்துக்கு கடத்தி செல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியாகும். கேரளாவையொட்டி தேனி மாவட்டம் அமைந்துள்ளதால் கேரளத்திற்கு இயற்கை வளங்களான எம்சாண்ட், ஜல்லி, கிரஷர் மற்றும் பாறைப்பொடிகளை பாஸ் மூலம் வாங்கி செல்கின்றனர். ஆனால் பாஸ்களில் குறிப்பிட்டுள்ள அளவுகளை விடவும் அதிகப்படியான அளவுகளில் இயற்கை வளங்களை அள்ளி செல்கின்றனர்.
நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் அள்ளிச்செல்லப்படும் இயற்கை வளங்கள் அனைத்தும் தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அதிகாரிகளையும் கவனித்து விட்டு அள்ளி செல்லப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,
தேனி மாவட்டத்திலிருந்து கம்பம் வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் ஜல்லி கற்கள், பாறை பொடி, எம்சாண்ட், பாறைக்கற்கள் ஆகியவை கொண்டு செல்லப்படுகிறது. இதை எடுத்து செல்வதற்கு முறையான அனுமதி கூறினாலும், அரசு அனுமதித்துள்ள அளவை விட அதிகளவில் எடுத்துச் செல்லப்படுகிறது.
இதுகுறித்து அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் தெரிந்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை. போக்குவரத்து முதல் உள்ளூர் காவலர் மற்றும் செக்போஸ்டில் இருக்கும் காவலர்கள், வனத்துறை, வருவாய்த்துறை என யாரும் கண்டுகொள்வதில்லை.
இதனால் தேனி மாவட்டத்தில் மழையளவு குறையத் தொடங்கியுள்ளது. கேரளாவில் 15 வருடங்களுக்கு முன்பே இயற்கை வளங்களை எடுக்கத் தடை விதிக்கப்பட்டது. அதைப்போல் தேனி மாவட்டத்திலும் தடைவிதிக்க வேண்டும் என்றனர்.