மதுரையில் கரோனா வார்டில் சிகிச்சைபெற்று வந்த 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகக் கரோனா தீநுண்மி தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமுடக்கம் தளர்வு செய்யப்பட்ட நிலையில், கரோனா தொற்று பரவல் வேகமெடுத்தது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. இதன் காரணமாக புதன்கிழமை(ஜூன் 24) முதல் 7 நாள்களுக்கு முழுமையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதோடு, கரோனா பாதிப்பு உள்ளவர்களைக் கண்டறிவதற்கான சோதனைகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பாதிப்பு கண்டறிவதற்கான சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி,
மதுரை மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,073 ஆக உயர்ந்துள்ளது. இதில் 423 பேர் குணமடைந்துள்ளனர். 641 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 9 பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில், ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 6 பேர் வியாழக்கிழமை ஒரே நாளில் இறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் இருவர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள். மற்றவர்கள் அறிகுறியுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள். அவர்களது இறப்புக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த 6 பேர் ஒரே நாளில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.